×

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும்: ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுப்பட்ட பயனாளிகளுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப, அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேரூர் நியாயவிலைக்கடையின் கீழ் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகை வழங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024)ம் வழங்கப்படும். எனவே விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்கள். நடைபெற்ற ஆய்வில் அகஸ்தீஸ்வரம் வட்டாசியர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும்: ஆட்சியர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி